தமிழனை வாழ வை...தமிழ் தானாக வாழும்.வாழ்க தமிழ் !!வெல்க தமிழ்!! .

Friday, August 6, 2010

இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை உருவாக்கியவர் த‌மிழர்

இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டை உருவாக்கியவர் த‌மிழர்




இந்தியாவின் ரூபாய்க்கான புதிய அடையாள குறியீட்டை உருவாக்கி சாதனை படைத்திருக்கும் டி.உதயகுமார், சென்னையை சேர்ந்த தமிழர் ஆவார்.
இவர் சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேசன் காலனி 4வது தெருவில் வசிக்கும், ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க. முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்தர்மலிங்கத்தின் மகன் ஆவார். உதயகுமார் கடந்த 1978ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆ‌ம் தேதி பிறந்தார்.
உதயகுமாரின் தாயார் பெயர் ஜெயலட்சுமி. இவர்களுடைய பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும். உதயகுமாருக்கு ராஜ்குமார் என்ற அண்ணனும், விஜயகுமார் என்ற தம்பியும், விஜயகுமாரி என்ற தங்கையும் உள்ளனர்.
இவர்களில் விஜய குமாரிக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. ராஜ்குமார் ஷார்ஜாவில் பொ‌றியாளராக பணியாற்றுகிறார். உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.
அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. பட்டம் பெற்று உள்ளார். சில நிறுவனங்களுக்கு டிசைன் வடிவமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து உள்ளார்.
அமெரிக்காவின் பணமான டாலர், இங்கிலாந்து நாட்டின் பணமான பவுண்டு ஸ்டெர்லிங் ஆகியவற்றை போன்று, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாள குறியீட்டை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி போட்டியை அறிவித்த போது அதில் உதயகுமாரும் கலந்து கொண்டார். அவர், கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார்.
போட்டிக்கு 3,000 அடையாள குறியீடுகள் வந்தன. இதில் பலத்த போட்டிக்கு மத்தியில் உதயகுமார் உருவாக்கிய அடையாள குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு கிடைக்கும்.

புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு கூடி ஆலோசனை நடத்தியது.
கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.
கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்
ரூபாய்க்கான அடையாள குறியீடாக தனது படைப்பு தேர்வானது குறித்துஉதயகுமா‌ர் கூறுகையில், “என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்” என்றார்.
“ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன்” எ‌ன்றா‌ர் உதயகுமார்.
உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.யின் வடிவமைப்பு துறையில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சும்மா தமாசுக்கு 

0 comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.